Showing posts with label True stories. Show all posts
Showing posts with label True stories. Show all posts

Monday, 27 April 2020

Level of stress


The level of stress is high among general public due to Covid-19

The level of Stress is rise as the corona virus.  People The level of Stress is rise as the corona virus.  People have never experienced such a large-scale challenge, and this one may affect mental and physical well-being, finances, social connections, and the health and safety of our loved ones. Isolation, changes in school https://lnkd.in/gDBg2zA and employment, and concern about our families and friends. I wish to find the level of stress among general public due to Covid-19 infection.
My research reviled that majority of people are spending their time with stress.

Monday, 13 April 2020

கடையில் பூத்த கவிதைகள் (Blooming poems in the groceries shop)


கடையில் பூத்த கவிதைகள்

கடையில் பூத்த கவிதைகள் 
கையில் கிடைத்து மூன்று மாதம்
பையில் என் தோழனாய் 
கிடைத்த இடமெல்லாம் கூடவந்தது.

நீண்டு செல்லும் அறிமுக உரைகள்,
ஈண்டு தேடி கவிதை கண்டேன்.
நான் பிறக்க முன்பே,
நீர் கவிதை அமுது குடித்தவர்.

ஒரு பக்க கவிதையாய்
சுருக்க மடலாய்,
அஞ்சலி செய்தியாய்,
அறிமுக விழிப்பாய்,
அமைந்த உம் கவிதைகள்,
கிழக்கின் கவிஞர்களிள் உம்
காத்திரமான பங்களிப்பு கண்டேன்.

அறிமுக உரைகள்,
அச்சத்தை தோற்றியது.
அடுத்த கவிதைத் தொகுப்புக்கு
எழுத யார் உள்ளார் என்று,

பக்கங்களின் என்னிக்கை 
பஞ்சம் இல்லா 
கவிதை கடையில்
கொட்டி கிடக்கும் 
கடுகு போல 
கடையில் பூத்த கவிதைகள்
கொட்டி கிடக்கிறது

உம் ஆரம்பகால கவிதைகளுக்கும்
பின் எழுதிய கவிதைகளுக்கும்
தொய்வையும் கருத்து செறிவும்
தேடுதலையும் தீவிர வாசிப்பையும் 
தேர்ந்த சொற்பிரயோகமும்
சோம்பல் இன்றி
நேர சேமிப்பையும், 
கோழையின்றி எதிர்பை
கூர்முனை சொல்லடுக்கி,
வீரனாய் உன் 
கவி நெஞ்சு வெடிப்பதையும் 
கண்டு வியந்தேன்.

அறிமுகம் இல்லாமல்
அப்துல் அஸீஸை
வகத்தில் அழைக்க
வருந்தி நின்றேன்.
இன்று அவரின் கவிதைகள்
எனக்கு அறிமுகம் தந்துள்ளது.
அழைபேசியில் அழைப்பெடுத்து, 
மறவாமல் வாழ்த்து சொன்ன
மகத்தான உதாரணக் கவி நீங்கள்.
என் தலைமையில் கவிபாடியமைக்கு
நன்றி

அன்புடன்
கவிதாயினி –தெல்தோட்டை இஸ்ரா
17/05/2017





Friday, 10 April 2020

I am Corona நான் கொரோனா




நான் கொரோனா

அன்பிற்குரியசி சிறுவர்களே  ஒரு மாத காலம் வித்தியாசமான ஒரு சூழலை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வீடுகளில் உங்கள் பெற்றோருடன் இருப்பதற்கும். பாடசாலைகள் மூடப்பட்டு இருப்பதற்கும் காரணம் நான். 

என்னுடைய பெயரை உங்கள் வாழ்நாளில் இனி மறக்கவே மாட்டீர்கள். அது நான் தான் கொரோனா. என்னை கோவிட் 19 என்றும் அழைப்பார்கள்.

என் மீது உங்களுக்கு அதிகம் கோபம் இருக்கும். நான் உங்களை தொற்றி விடுவேனோ என்ற பயம் உங்களுக்கு இருக்கும். 

WHO எனும் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் உங்களை நான் தொற்ற மாட்டேன்.

1 தும்மும் போது உங்கள் கைகளால் உங்கள் மூக்கை மறைத்துக் கொள்ளுங்கள்.

2. நண்பர்களுடன் விளையாடும் பொழுது ஓரளவு தள்ளி இருந்து ஆள் தொடர்பை குறைத்துக் கொள்ளுங்கள்.

3. முடியுமான வரை வெளியில் செல்வதை தவிர்த்து விடுங்கள்.

4 காய்ச்சல் அல்லது இருமல் சளி போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் பெற்றோருடன் கலந்துரையாடி மருத்துவ ஆலோசனைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ளுங்கள்.

நான் அவ்வளவு மோசமானவன் அல்ல. என்னைக் கண்டு நீங்கள்  பயப்படத் தேவையில்லை. 

சுகாதார வழிமுறைகளை
பின்பற்றும் போது நான் ஒருபோதும் உங்களை தொற்றவே மாட்டேன். உங்கள் பெற்றோருக்கும் இதனை கற்றுக் கொடுங்கள்.

தொடர்ந்தும் நீங்கள் என்னை பற்றிய தகவல்களை சம்பவங்களை பலரிடமிருந்தும், பலவழிகளிலும் கேட்டும் வருகிறீர்கள். 

சில வேளை தொலைபேசிகள் ஊடாக சமூக வலைத்தளங்களில் பார்த்தும் வருகிறீர்கள்.  அவற்றில் அதிகமானவை திரிபுபடுத்தப்பட்ட செய்திகளாகும். 

அதனை வாசித்து நீங்கள் பயப்படவோ, கவலையடையவோ, வீண் பீதியடையவோ தேவையில்லை.

உங்களை அறியாமலே நீங்கள் பின்வருமாறு நடந்து கொள்ள முடியும். 

தூங்குவதற்கு பிரச்சினையாக உள்ளதா?

தூங்கும்போது பயங்கரமான கனவுகள் வருகிறதா?

தனிமையில் இருப்பதற்கு பயமாக இருக்கிறதா?

உங்கல் விளையாட்டு பொருட்களை திரும்ப திரும்ப சுத்தப்படுத்துகிறீர்களா?
வழமையை விட உங்களுக்கு கோபமும் ஆத்திரமும் ஏற்படுகிறதா?

உங்களுக்கு யாருடனும் கதைப்பதற்கு சேர்வதற்கு விருப்பம் இல்லாமல் போகிறதா?

காலை கடமைகளை நிறைவேற்றுவதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?

உணவு உண்பதற்கு விருப்பமற்று காணப்படுகிறதா?

பெற்றோர்களே பாதுகாவலர்களே மேற்குறிப்பிட்ட விடயங்களை சிறுவர்களிடம் நீங்கள் அவதானிக்கலாம். 

இது அவர்களின் சாதாரண நடத்தையும் மன வளர்ச்சியையும் பாதிக்கும் 

சிறுவர்களில்  பெரும்பாலும் அவர்களுடைய பயம் மற்றும் நெருக்கீட்டை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருக்கும். 

எனவே கவலையாக வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் பின்வருமாறு உதவ முடியும்

1. நாளாந்த பழக்கங்கள் சிறுவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். இப்போது அதில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிருக்கும். உரிய நேரத்தில் காலையில் எழுந்திருக்க மாட்டார்கள். பகல் உணவு சாப்பிடுவதற்கு அண்மித்தே  காலை உணவை சாப்பிடுவார்கள். எனவே மீளவும் பழக்கங்களை உருவாக்குங்கள். வழமையாக தூங்கும் நேரம் மற்றும் சாப்பாட்டு நேரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒன்றாக கதைகளைக் கூறி மகிழ்ந்திருங்கள். பாடல்களைப் பாடி கழித்து இருங்கள். இதைத்தான் சிறுவர்கள் விரும்புகிறார்கள்.

2. பெற்றோர்களே பாதுகாவலர்களே நீங்கள் உடலால் மட்டுமே சிறுவர்களோடு இருக்கிறீர்கள். (Physically present mentally out) நீங்கள் என்னைப் பற்றி தேடிப் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட  உங்கள் பிள்ளையைப் பற்றி தேடிப்பாருங்கள். அவர்கள் இந் நேரத்தில் உங்களுடன் இருக்கவே விரும்புகின்றனர். அதனை அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். இதன் போது தயவு செய்து உங்கள் தொலைபேசிகளையும், நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சி பெட்டிகளையும், நீங்கள் வாசிக்கும் பத்திரிகைகள்  அல்லது உங்கள் பொழுது போக்கு சாதனங்களை ஒரு பக்கமாக வைத்து விட்டு பிள்ளைகளோடு உங்கள் பொழுதை கழிக்க முயற்சி செய்யுங்கள்.

3. வீடுகளை சுற்றி இருக்கின்ற ஏனைய சிறுவர்களுடன் விளையாடுவதற்கு நீங்கள் அனுமதிக்காதது ஏன்? என்பதனை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். சமவயது பாடசாலை நண்பர்களோடு தொலைபேசியுடன் உரையாட வாய்ப்பளியுங்கள்.

4.  உங்களுடைய ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். சிறுவர்கள் பெரியவர்களிடமும் பெற்றோர்களிடமும் அவதானித்தே  தம்மிடையே மனவடுவினை வெளிப்படுத்த கற்றுக் கொள்கிறார்கள். உங்கள் நடத்தையினையே அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

5. பாடப்புத்தகங்களுடன் உங்கள் பிள்ளைகளை கட்டிப்போட்டு விடாதீர்கள். அவர்களின் சிறு பராயத்தை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்கள் பாடப் புத்தகத்திற்கு அப்பால் பல வாழ்க்கைப் பாடங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறது. 

இது வாழ்வில் இன்னொரு தடவை எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்பதனை கற்றுக் கொடுக்கிறது.

என்னைப்பற்றி நானே சொல்ல வேண்டும். 

என் அறிவுரைகளை தயவு செய்து பின்பற்றுங்கள். 

நாளைய இவ்வுலகம் சிறுவர்களின் கையிலே இருக்கிறது

இடர்காலத்துக்கு முகம்கொடுக்கும் திறனுள்ள சிறுவர்களாக இவர்கள் வளரட்டும். 

அதில் நான் எதிர்மறையாக பங்களிப்பு செய்திருக்கிறேன். 

எதிலும் ஒரு பாடம் இருக்கிறது. 

இதிலும் ஒரு பாடம் இருக்கிறது.
நன்றி

நான் கொவிட்-19





Tuesday, 31 March 2020




வகுப்பறைக்கு வெளியே

இரா. தட்சனாமூர்த்தி எழுதிய வகுப்பறைக்கு வெளியே என்ற நூல் பற்றிய விமர்சனம்.

புதுவை அறிவியல் இயக்கம் book for children நான்காம் பதிப்பாய் 2018 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நூலிற்கு அணிந்துரையினை முனைவர் பரசுராமன் வழங்கியுள்ளார். அவரது அணிந்துரையில்,

"இதுதான் ஆசிரியர்களின் கூட்டு முயற்சி சாத்தியமானால் பள்ளி மாணவர்கள் பலருடைய இடைவிலகளை தவிர்க்க முடியும். ஒருவேளை உங்களுக்கு அதிகம் சிரமம் இல்லாமலேயே அவர்களுக்கு உதவ வாய்ப்பு இருக்கக்கூடும்" என்று குறிப்பிடுகின்றார் .

இக்கதை தொகுப்பில் உள்ளடங்கியுள்ள சுமை, பாயாசம் பரமசிவம், காசு மேல காசு வந்து, வண்டிக்காரன், எனக்கு இங்கிலீஷ் வர்ல, வேலன், வகுப்பறைக்கு வெளியே ஆகிய ஏழு கதைகளுமே  பல்வேறு தளங்களில் இருந்து வறுமையின் கோரப்பிடியினால் ஏற்பட்டுள்ள சுமையைப்பற்றி பேசுகின்றது.

என் உரையில் ஆசிரியர் இப்படி குறிப்பிட்டுள்ளார் 

"அரசு பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பணியாற்றிய அனுபவத்தில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்து ஏழு தலைப்புகளில் இந்நூலில் குறிப்பிட்டுள்ளேன். சமூக சூழ்நிலையாலும் பள்ளிச் சூழலும் கல்வி முறையாலும் படிப்பை தொடர முடியாமல் போன குழந்தைகளின் உண்மைக்கதை. இந் நூலில் குறிப்பிட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும் உண்மையில் நடந்தவை. சிறு மாற்றம் கூட செய்யாமல் நானே ஒரு பாத்திரமாக எனது அனுபவத்தில் எழுதியுள்ளேன்". என குறிப்பிட்டுள்ளார்

இன்றைய கல்விமுறை தொடர்பான பரந்த விமர்சனத்தில் ஒன்று தான் 100 சதவீத தேர்ச்சி அல்லது பாட அடைவு.

"ஒரு மாணவனை வகுப்பில் இடையில் நிறுத்தி இருந்தால் அது எப்படி 100 சதவீத தேர்ச்சி ஆகும். முதல் வகுப்பில் சேரும் மாணவர்களில் 42 மாணவர்களே மேல்நிலைக் கல்விக்கு வருகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. மீதியுள்ள 58 பேர் என்ன ஆனார்கள்? அவர்களை பள்ளியைவிட்டு விரட்டியது யார் என் அனுபவத்தில் நான் சந்தித்த உண்மையான சம்பவங்களை இந்நூல் குறிப்பிடுகிறது".  என மேலும் நூல் உருவாக்கத்திற்கான அழுத்தத்தை எடுத்துச் சொல்கிறார். 

முதலில் வருவது சுமை. எல்லா கதைக்குள்ளும் சுமைகள் நிறைய இருக்கின்றன. வகுப்பறையில் சுமைகள் உள்ள மாணவர்களை இனங் காணவும் அவர்களின் சுமைகளை கண்டறியவும் ஆசிரியர் கையாண்டுள்ள அணுகுமுறை சிறப்பாக உள்ளது. 

முதல் கதையில் கட்டுரை எழுதப் பணிப்பதன் ஊடாக வகுப்பில் இறுதி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவியின் பிரச்சினையை கண்டறிந்துள்ளார். ஆனால் அவர் குழந்தையை அணுகிய விதத்தில் எனக்கு உடன்பாடில்லை இல்லை 

"என்ன செய்ற கோவேறு கழுதை" 

இது ஒரு நல்லாசான் கூறிய வார்த்தைகளாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. 

வீட்டுக்கு வந்த கொத்தனாரை அண்ணா என்று அறிமுகப்படுத்தி பின்னர் அப்பா என்று அலைக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டிருந்தாள் அவள் அம்மா.

"எங்க அம்மாவை இன்னொரு குழந்தை பெற்றுக்கொடு என்று சொல்கிறாராம் சார் அவங்க உடம்பு தாங்காது சார்"

இந்த வேதனையில் அண்ணாவுக்கு எழுதிய கடிதம்....12 வருடங்களுக்கு பிறகு அக்காவும் தம்பியும் தாயை விட்டு பிரிகின்றனர்.

"இவ்வளவு மனச் சுமையுடன் இந்த வயதில் இவள் எப்படி படிக்கப் போகிறாளோ"  என்ற வினாவும் அவருக்கு எழுந்துள்ளது.

பாயாசம் பரமசிவம் என்னும் கதையில் தனது பெயரை உணவுப்பண்டம் ஒன்றின் பெயரோடு அறிமுகப்படுத்தி, பட்ட பெயர் கொண்டு வகுப்பில் அழைக்கும் மாணவனை கண்டறிகிறார்.

மதிய வேளையில் பாயாசமும் வடையும் கொண்டுவந்து பிள்ளைக்கு ஊட்டிவிடும் தாயும் திருமண வீட்டிற்கு விருந்துபசாரத்துக்கு சென்று அமர்ந்த போது இலை விரித்து பணிவிடை செய்த தாயும் ஒருவராக இருந்தார். இறுதியில் விபத்து ஒன்றுக்கு முகம் கொடுத்து தாய் படுக்கையில் விழ, பரமசிவத்தின் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

"என்ன வேலை செய்வாய்?"

"சம்மட்டியால் கம்பி வெட்டுவேன். எடுபிடி வேலைகள் எல்லாம் செய்வேன்"

"அவனுக்கு 12 வயது. அது சம்மட்டி தூக்கும் வயதும் இல்லை, உடம்பும் இல்லை. புத்தக சுமை குறைந்து போனது ஆனால் சம்மட்டி சுமை ஏறிவிட்டது. வருகைப்பதிவேட்டில் இடைநிறுத்தம் என்று சிவப்பு மையால் எழுதிவிட்டேன்"  என முடிக்கிறார்.

தொடர்ந்துவரும் காசு மேல காசு வந்து எனும் கதையில் சுற்றுலாவிற்கு தயாராகும் பிள்ளைகளையும், அதன்போது செலவு செய்யும் மாணவனையும், அவனுடைய வருமானத்தின் பின்னணியையும், இறுதியில் புதிதாக வெளிவரும்
திரைப்படங்களின் டிக்கட்டுகளை திருட்டால் விற்று பணம் உழைக்கும் ஒருவனாக மாறிவிடுகிறான்.  அவன் அன்று அவருக்கு 4 டிக்கட்டுகளை இலவசமாக கொடுத்து விடுகிறான். படம் முழுவதும் அவருக்கு குற்ற உணர்வில் கழிகிறது.

வண்டிக்காரன் கதையில் ஆசிரியர்களுக்கு உதவி செய்யும், எடுபுடி  மாணவனாக அடையாளம் கண்டு அது தொடர்பாக ஆசிரியருடன் நடத்தும் உரையாடல், பின்னர் தாமதித்து பாடசாலைக்கு சமூகம் தருதல், காரணத்தைக் கண்டு பிடித்ததில் தந்தையுடன் ஒத்தாசையாக வேலை செய்வதனால் உரிய நேரத்தில் பாடசாலைக்கு வரமுடியவில்லை. இறுதியில் தந்தை விபத்துக்குள்ளாக, குடும்ப சுமைதாங்கியாக மாறிவிடுகின்றான். ஒருநாள் மண் அகழ்விற்கு எதிரான போராட்டத்தில் தலைமைதாங்கி குரல் எழுப்புவதனையும் அழகாக விவரித்துள்ளார்.

எனக்கு இங்கிலீஷ் வர்ல எனும் கதையில் ஆசிரியர்களுக்கிடையிலான உரையாடல் இடம்பெறுகிறது. புத்தக அறிமுகத்தில் குறிப்பிடுவதுபோல இக்கதை முழுதுமாக நூறு வீத அடைவு தொடர்பாகவே செல்கிறது. இ


இக் கதையை வாசிக்கும் பொழுது எனக்கும் பாடசாலையில் இருந்து வெளியேறும் வரை இங்கிலீஷ் வர்ல. சாதாரணதரம் உயர்தரம் ஆகிய இரண்டு நிலைகளிலும் முதல் தடவை நான் ஆங்கில பாடத்தில் சித்தி அடையவில்லை.  எனது பள்ளிக்கால த்தில் ஆங்கிலம் கற்பதற்கு எடுத்த முயற்சிகளின் அனுபவங்களை இக்கதை சிறப்பாகவே மீட்டிப் பார்க்கச் செய்தது.

இக் கதைத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை வேலன் ஆகும். வறுமை, ஆட்டுக்குட்டி, சிறுவர் தொழிலாளி, பாடசாலை வாழ்க்கை, என்ற நிலைகளில் நின்று கதைச் சொல்லப்படுகின்றது. குடிகார தந்தைக்கும் தாய்க்கும் இடையே தொடர்ந்து நடக்கின்ற சண்டை, தாய் வாங்கிக்கொடுத்த ஆட்டுக்குட்டி அதன் பெயரே வேலன், அதற்கு கழுத்தில் கட்டிய மணி, அதனோடு பேசும் வார்த்தைகள், புத்தகப்பையை வைத்ததும் ஆட்டுக்குட்டி துள்ளி ஓடி வந்து அவளோடு விளையாடுவது, இதையெல்லாம் வறுமை காவுக்கொண்டு செல்வந்தர் வீட்டுப் பணிப் பெண்ணாக மாற்றிவிடுகிறது. படித்த பெற்றோர்களாகிய அவர்கள் (தொழில் வழங்குனர்) அவளை பாடசாலைக்கும் அனுப்பி மாதத்திற்கு 500 ரூபா சேமிப்பு செய்து கவனித்து வருகின்றார்கள். 

அன்று சமைப்பதற்காக ஆட்டிறைச்சி வாங்க சென்றபோது, மரகுற்றியின்மேல் வெட்டப்பட்ட தலையும், அதில் தொங்கும் மணியும், அது தனது வேலன் என்பதனையும், இரவு உணவிற்காக ஆட்டிறைச்சி கறியை பரிமாற வேண்டும் என்ற பெரும் துயரில் வகுப்பறையில் அன்று முழுதும் அழுது தீர்த்த  பெண் குழந்தையின் உணர்வினை துள்ளியமாக வெளிக்கொண்டு வந்துள்ளார். 

புகை மூட்டத்தின் பின்னால் எனும் நூலில் ஆட்டுக்குட்டியுடன் சிறுபிள்ளைகள் எவ்வாறு இயல்பாக இணைந்து விடுகிறார்கள் என்பதுவும் வைக்கம் மு பசீர் எழுதியுள்ள ஒரு கதையும் இருப்பதாக நான் வாசித்திருக்கிறேன்
இவையெல்லாவற்றையும்  இவ்வேலன் கதை ஊடுருவிச் சென்றுள்ளது.

இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடல் வேண்டும். எல்லா கதைகளுமே தென்னிந்திய மண்ணில் பல்வேறு இடங்களில் இடம் பெற்றதாக அமைகின்றது. புதுவை பகுதியை மையமாகக்கொண்டு அமைந்திருக்கிறது. இது ஒன்றும் எனக்கு புதிதல்ல.புற்றுநோய் சிறுவர்களைத் தேடி எல்லா பகுதிகளுக்கும் நான் ஐந்து வருடங்களாக பயணித்திருக்கிறேன்.அதன் அடிப்படையில் கதை சொல்லும் இடங்கள் தொடர்பான மனக்காட்சி எனக்கு தெளிவாகவே தெரிகிறது. 

இறுதியாக புத்தகத்தின் தலைப்பை தாங்கி வந்திருக்கும் வகுப்பறைக்கு வெளியே என்ற கதை இடம் பெற்றுள்ளது. 

திவ்யா என்ற பாத்திரத்துடன் அறிமுகமாகும் இக்கதையில், தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான விரிசல், டீசி வாங்க வரும் தந்தை, அக்கா ஒரு இடத்திலும் தம்பி இன்னொரு இடத்திலும் வாழும் நிலை, இறுதியில் ஆசிரியரைத் தேடி வரும் அத்தையும் மகளும், அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றதனால் கல்வி இடை நிறுத்தப்பட, தற்போது அத்தையுடன் பூக்கடையில்  இருக்கிறாள் திவ்யா. 

இறுதியாக பூக்கடை யில் ஆசிரியரை இனங்கண்டு கொண்ட திவ்யா ஆசிரியரின் மனைவியுடன்
"சார் எங்க சார்"
என்று குறிப்பிடுவதும்
"வந்து பார்க்கிறேன் திவ்யா". என்று ஆசிரியர் விடைபெறுவதும் இடம்பெற்றுள்ளது.

கோவிட் 19 விடுமுறை வாசிப்பாக இணைந்துகொண்ட இப்புத்தகம். இரு தினங்களாக காய்ச்சலில் இருந்த என் மகளுடன் கூடவே பயணப்பட்ட கதைகள். 

பெற்றோரும் கல்விச் சமூகமும் வாசிக்கவேண்டிய நல்லதொரு புத்தகம். 

உண்மை கதைகளின் தொகுப்பாக அனுபவப் பகிர்வாக இது அமைந்துள்ளது. 

மிகக்குறுகிய காலத்திற்குள் வாசித்து முடிக்க கூடிய சுவாரசியமான புத்தகம். 

புத்தகத்தின் பல கதைகளின் இறுதியில் பல்வேறு விடயங்களை வாசகர்களின் விவாதத்திற்கு விட்டு வைத்துள்ளார்.

உண்மையில் சுய ஊக்கப்படுத்தல் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் வளரவேண்டிய, விருத்தி செய்யப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
அதன்போது இலக்கை நோக்கி போராடக்கூடிய சத்தியும் உரிய காலப்பகுதியில் உரிய அடைவுகளை எய்தக்கூடிய வழியும், வாய்ப்பும் கிடைக்கின்றது.

ஆசிரியர் குறிப்பிடுவது போல நாம் ஒவ்வொருவரும் எமது நிலையில் நின்று வாசித்து சிந்திக்க வேண்டிய ஒரு கருவூலமாக இப்புத்தகத்தை நான் அடையாளப்படுத்த முடியும். இதற்குக் காரணம் புத்தகத்தின் ஆசிரியர் ஓர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஆவார்.

முனைவர் தா பரசுராமன் குறிப்பிடுவதுபோல, 

"மாணவர்கள் படிக்காமல் போனதற்கு குடும்பமே காரணம். குடும்பத்துக்கு பின்னால் சமூகமும், பள்ளிக்கு பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்".

மொத்தத்தில் யார் காரணம் என்பதனைவிட நானே காரணம் என்று ஏற்றுக்கொண்டு முன்னோக்கி செல்வது காலத்தின் தேவை.

#Covid-19
#Covid-19diary

Saturday, 28 March 2020


 

திரைநிலவன் Thirai Nilawan ஏ.எஸ்.எம். நவாஸ். இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இன்றோடு ஒரு கிழமை ஆகிறது.

எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர், செய்தி தொகுப்பாளர் என பன்முக ஆளுமை கொண்ட மனிதர். முகநூலில் அவரது  இறுதித் தகவல் கவலையை ஏற்படுத்தியது. எப்படியாவது சென்று பார்த்துவிட வேண்டும் என்று பல தடவை முயற்சி செய்தேன். இறைவனின் நாட்டம் கைகூடவில்லை.

நவாஸ் நானா தொடர்பாக நான் எழுத என்ன இருக்கிறது. 

அவரைப் பற்றி எனக்கு என்ன தெரியும். 

ஏன் நான் அவரைப்பற்றி பரிமாறிக் கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய மனிதர். குணத்தால் மிகவும் பணிவானவர். அவர் இருக்கிறாரா இல்லையா என்று கூட சிலவேளை எமக்கு தெரியாமல் இருக்கும். தகவல்களை பத்திரிகைகள் சுமந்து வரும் பொழுதுதான் அவர் இருந்திருக்கிறார் என்று கூட எமக்கு தெரியவரும்.

எல்லோரையும் ஒரே தளத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய, உயர்வு தாழ்வின்றி பாராட்ட கூடியவர். நல்ல கலைஞனுக்குரிய இரசனை திறன் அவருக்கு இருந்தது.

வெறுமனே 5 ஆண்டுகள் பழக்கம்தான். குறைந்தது ஒரு பத்து தடவைக்கு மேல் கூட அவரை நான் சந்தித்து இருக்க மாட்டேன். ஆனால் சந்தித்த போதெல்லாம் அவரோடு நான் கதைக்காமல் இருந்ததும் இல்லை. அவரும் என்னை சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நலம் விசாரிக்காது சென்றதும் இல்லை.

கருத்தக் கோடுகள் புத்தகத்தை கையில் தந்து,

"எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் இஸ்ரா" 
என்றார்

உம்மா அதனை வாசித்து விட்டு அவரது உணர்வை ஒரு குறிப்பில் எழுதி இருந்தார். நான் அதனைத்தான் நவாஸ் நாநாவுக்கு தபாலிட்டேன்.

மிகவும் இரக்க சுபாவம் உடையவர். பூனைகளுக்குக்கூட மீன்களை காசு கொடுத்து வாங்கி உணவளிப்பதில் மகிழ்ச்சியடைபவர்.

ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பல்வேறு மக்களும் தம்முடைய பங்களிப்பினை செய்து வருகின்றனர். குறிப்பாக  வடகிழக்கு இலக்கியம், புலம்பெயர் இலக்கியம்,  மலையக இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், என்ற வரிசையில் சமூகத்தவர்களும் இணைத்துக் கொள்கின்றனர்.

நவாஸ் நாநா மேமன் சமூகத்தில் இருந்து தமிழ் வளர்த்த ஒருவர். அவரது தந்தையின் இறப்புச் செய்தியை தொடர்ந்து அவரோடு உரையாடிய போது மிகவும் வினயமாக என்னிடம் அவர் ஒரு விடயத்தை கேட்டுக்கொண்டார்.

"மேமன் வளர்த்த தமிழ் என்ற ஒரு கட்டுரையை எழுதுங்கள்"

என்பதே அவரது வேண்டுகோள். அதனை இன்றளவும் என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

நான் யாரென்று கூட அறியாது என்னைப் பற்றிய தகவல்களை எனக்கு அறியாது திரட்டி அவரது கலா வானம் நேயர்களுக்காக என்னை அறிமுகம் செய்தார். அதில் அவர் குறிப்பிடும் போது,

"நம் நாட்டில் ஒரு துணிச்சல்கார கவிதாயினி இருக்கிறார். தெல்தோட்டை இல் பிறந்த இக்கவிதை குஞ்சு படிப்படியாக சிறகு முளைத்து கவிதை வானில் பறக்க தொடங்கியுள்ளது" .

இப்படி சிறப்பான ஒரு அறிமுகத்தை தந்து என்னை ஊக்கப்படுத்திய மறக்க முடியாத நன்றிகுறிய இலக்கிய உலகம் எனக்கு அறிமுகப்படுத்திய சகோதரர். 

அந்த அறிமுக குறிப்பின் இறுதியில் அவர் இப்படி ஒரு கவிதையை குறிப்பிட்டுள்ளார்.

"என் பேனா முனை வெளிப்படல்
பெரும் துன்பங்களின் திடல்
இத்திடலில் ஆடியவர் போக
அடங்கிய சிலர்
அடுத்தடுத்த கட்டங்களில்
இந்த உலகம் சுருங்கிவிடும்
உயிர்கள் பெருகிவிடும்
வாழ்வதற்கு உலகம் மற்றும்
வாடும் உயிர்களை எண்ணி
இப்போது வருந்துகிறேன்".

வாழும் இவ் உலகின்
மரண ஓலம் கேட்கும்
வைரஸ் பீதி பரவியிருக்கும்
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்
தருணம் பார்த்து
ஊரைக்கூட்டி கொள்ளாமல்
எனக்காக பிரார்த்தியுங்கள்
எனக் கேட்டு
எமை விட்டுப் பிரிந்த
திறை நிலாவன்
ஏ. எஸ். எம் நவாஸ் அவர்களுக்கு
நன்றியோடு பிரார்த்திக்கிறேன்.

உயர்ந்த குணநலன்களை
இறைவன் ஏற்றுக் கொண்டு
மேலான சுவர்க்கம் கிடைக்க   பிரார்த்திக்கின்றேன்
துயரால் வாடும் குடும்பத்தினரின்
துயரில் பங்கு எடுக்கின்றேன்





Monday, 23 March 2020

Who am I meet (நான் காணும் மனிதர்கள்) -2



நான் காணும் மனிதர்கள்..

சுர்ஜித் என்ற சிறுவன் கடந்த வருடம் தென்னிந்தியாவில், திருச்சி மாவட்டத்தில், மணல் கேனி என்னுமிடத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து காப்பாற்றுவதற்காக போராடிய தினங்கள் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். அவ்வாறு அமுதாவின் அம்மா இதைப்போன்று தன் பிள்ளையை இழந்து  பட்ட வேதனைகளை மிகவும் அருகில் இருந்து நான் கண்டிருக்கின்றேன். 

சர்வதேச அரங்கில் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி  அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிறந்த ஜெசிக்கா மெக்லுவா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்  இன்னும்சில தினங்களில் அவர் தனது 34வது பிறந்த தினத்தைக் காணவுள்ளார். இப்பதிவில் இடப்பட்டிருக்கும் புகைப்படம் அவருடையது. அவர் பற்றிய தகவல்களை விக்கிபீடியா தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறே அதிர்ஷ்டவசமாக கிணற்றில் விழுந்து அரை மணித்தியாலங்களில் காப்பாற்றப்பட்டு, எண்பத்தைந்து மணித்தியாலங்கள் எந்த அசைவும் இன்றி, ஆறுமாதங்கள் கண் தெரியாமல் இருந்து, பிள்ளைக்கு காது கேட்கிறதா இல்லையா என்ற சந்தேகத்துடன் இரண்டு வருடங்கள் உருண்டோடி போய்விட்டன. மூன்றரை வயதுகளில் தான் பிறந்த குழந்தையின் அசைவுகளை போன்று மெதுமெதுவாக குழந்தையின் அசைவுகள் ஏற்படத் தொடங்கின. இப்படி தப்பிப் பிழைத்த தனித்துவ சிறுவன் ஒருவனை அண்மையில் சந்தித்தேன். அவனுக்கு இப்போது வயது ஆறு. அவன் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை . பிறந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாக முன் விளையாடுவதற்காக நீர் எடுக்க கிணற்று பக்கமாக சென்றவன் கிணற்றில் விழுந்து விடுகிறான்.

துருதுருவென அவன் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.  அவனது தாய்  முன்பள்ளி பிள்ளைகளுக்காக கற்பிக்கும் ஆசிரியர். விடுமுறை இல்லாது மாதத்தில் ஒவ்வொரு நாளும் வேலை செய்தல் வேண்டும். சொந்த தேவைகளுக்கு கூட அவருக்கு விடுமுறை வழங்கப் படுவதும் இல்லை. தன் பிள்ளையை கவனித்துக் கொள்ள அவரால் முடியவில்லை.

ஒரு இடத்தில் சிறிது நேரம் கூட அவனால் இருக்க முடியவில்லை. இங்கும் அங்குமாக ஓடித் திரிந்து கொண்டே இருந்தான். கற்றல் செயற்பாடுகள் எதிலும் அவனுக்கு ஈடுபாடில்லை. வரைந்து கொடுக்கப்பட்ட வடிவத்திற்குள் நிறம் தீட்டக்கூட அவனால் முடியவில்லை. அவை சட்டத்துக்கு வெளியே சென்று இருந்தது. எல்லாப் பொருட்களையும் எடுத்து அதனை கையாண்டு உரிய இடத்திலன்றி வேறு   இடத்தில் விட்டு சென்று விடுவான்.

"அவன் நல்ல பிள்ளை. இரக்க குணமுடையவன். படிக்க மாட்டேங்குறாங்க........."

இது அவனது பாட்டியின் வசனங்கள்.

அவனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அத்தாய் மிகவும் போராடிக்கொண்டிருந்தாள். என்னை போலீஸ் அதிகாரியாகவும் நான் குழப்படி செய்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று பயமுறுத்தினாள். அவரின் அணுகுமுறை அப்போது எனக்கு சரியா? தவறா? அல்லது நான் பொலீஸ் அதிகாரியா? என்று கூட என்னை ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தது.

அப்போது எனக்குள் எழுந்த வினாவே இச் சிறுவனின் தந்தை எங்கு சென்று விட்டார்?

நான் தந்தையைப் பற்றி கேட்ட போதெல்லாம் தாய் வேறு பதில்களையே தந்து கொண்டிருந்தார். என் வினா அவருக்கு விளங்கவில்லையா என்ற சந்தேகத்தில் தெளிவாக நான் அவரிடம்,
தந்தை என்ன செய்கிறார்?                என்று கேட்டேன்.

அவர் வீட்டுக்கு வருவதில்லை. நாங்கள் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். அவர் மாளிகாவத்தை........... 

சரி ஏன் அவரை வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொன்னீர்கள். 

அவருக்கு வேறு மாதிரி பழக்கம் இருக்கிறது. போதாக்குறைக்கு அவர் என்னிடம் வந்து பணம் கேட்கிறார். ..... 

நான் அத்தோடு  நிறுத்திக் கொண்டேன். இன்னும் பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. அவற்றை நான் அத்தாயிடம் கேட்கவில்லை. உங்களிடம் கேட்கிறேன்  பதில் இருந்தால் பதிவிடுங்கள்.

1). உழைக்கும் வர்க்கம் எது?

2). தப்பிப் பிழைத்திருப்பது எதற்காக?

3). என் வினாக்களுக்கு வேறு பதில்களை அளித்தமைக்கான காரணம் என்ன?

நான் காணும் மனிதர்களைப் போல் நீங்களும் காண்பீர்கள். அவர்களிடம் நாம் கற்கும் பாடங்கள் பாட புத்தகத்தில் மீட்கப்படாதவை. வினாக்கள் எல்லாவற்றிற்கும் விடைகள் காணப்படுவதுமில்லை.

 



காதோடுதான்
நான் பேசுவேன்

சகோதரர் பஸ்லி ஹமீட் எழுதிய சிறுகதைப் புத்தகம் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றது. முகநூல் ஊடாக என்னுடைய முகவரியைப் பெற்றுத் தபாலிட்டிருந்தார். ஒரு மாதத்துக்கும் கூடுதலாக என்னோடு பயணப்பட்டது. கொவிட்-19 பொது விடுமுறை புத்தகத்தை வாசித்து முடிக்க ஏதுவாக அமைந்தது.

காதோடுதான் நான் பேசுவேன் என்பதனை பற்றி குறிப்பிடுவதற்கு முன்னர் அதன் ஆசிரியர் சகோதரர் பஸ்லி ஹமீட் உடனான எனது அறிமுகத்தை குறிப்பிடுதல் பொருத்தம் என நினைக்கிறேன்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி இன்றுபோல் ஒரு நாளில் உலக கவிதை தின நிகழ்வொன்று வகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்விலேயே முதல் முறையாக சகோதரர் பஸ்லி ஹமீதை நான் சந்தித்தேன். ஹைகூ கவிதைகள் தொடர்பான தனது அனுபவ பகிர்வினை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பல பொழுதுகள் அவரை வகவத்தில் அத்தி பூத்தாற் போல சந்தித்திருக்கிறேன். மிகவும் அமைதியான, சின்ன கவிதைகளுக்கு சொந்தக்காரர். ஹைக்கூ கவிதைகளை வரம்புகளோடு, இலக்கண முறைப்படி யாப்பதில் கைத்தேர்ந்தவர். முகநூலில் வலம் வரும் அவரது கவிதைகளை உன்னிப்பாக பலமுறை வாசிப்பதில் எனக்கு அலாதி பிரியம். பல தடவை அவைகளுக்கு பின்னூட்டல் இட்டிருக்கிறேன். இப்படி ஒரு கவிஞனாகவே  பஸ்லி ஹமீதை நான் அறிந்து வைத்திருந்தேன்.

காதோடுதான் நான் பேசுவேன் கையில் கிடைத்ததும், எனக்குள் பல சிந்தனைகளும் உணர்வுகளும்  ஏற்பட்டன. அதற்குக் காரணம் புத்தகத்தின் வடிவம். மகிழ்வாக இருந்தது. சாதாரண புத்தகங்களின் வடிவத்தை விட அது வேறுபட்டிருந்தது. பாடசாலைக் காலங்களில் குறிப்பு எடுப்பதற்காக பயன்படும் குறிப்புப் புத்தகம் போன்று அது காணப்பட்டது. எனவே கவிதைகளுக்கு இவ்வாறான புத்தக வடிவங்கள் பொருத்தமானவையாக இருக்கும். அத்தோடு பிரயாண வாசகனுக்கு இவ் அமைப்பிலான புத்தகங்கள் இலகுவாக வாசிக்கக் கூடியதாக காணப்படுகின்றது. 
நூலின்  தலைப்பு சினிமா பாடல் ஒன்றின் முதல் இரண்டு வரிகளாக் கேட்ட ஞாபகம் வருகிறது. உள்ளே புத்தகம் தொடர்பான அடிப்படைத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ISBN இலக்கம் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை. பெற்றோருக்கு சமர்ப்பணமாக இந்தப் புத்தகம் தன்னை உயர்ந்த இடத்தில் நிறுத்திக் கொள்கிறது. ஆசிரியரின் உரையுடன் புத்தகம் தொடர்பான அறிமுகம் நின்றுவிடுகிறது. இஸ்லாமிய விழுமியங்களை  அடிப்படையாகக்கொண்டு புத்தகம் அமைந்திருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இவை எல்லாமே எனக்கு வித்தியாசமாக இருந்தது. நூலாசிரியர் தனது உரையில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.  

"சிறுகதைகளில் அஃறினணகளையே கதை சொல்ல வைத்திருக்கிறேன். சிறுகதைகளின் இயல்புகளையும், யதார்த்தத்தினையும் மீற நான் நினைக்கவில்லை.  இக்கதைகள் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தினை தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவை சுவாரஷ்யமான கதைகள் என்று நீங்கள் சொல்வீர்களாயின் அதுவே எனது முயற்சியின் வெற்றியாகும் இனி கதைகளைக் காது கொடுத்து கேளுங்கள்" என முடித்திருக்கிறார்.

இனி கதைகளை காது கொடுத்து கேட்போம். பொருளடக்கம் இல்லாத சிறுகதை தொகுப்பு இது. அதனால் உள்ளடக்கியுள்ள சிறுகதைகளின் தலைப்புகளை பட்டியலிடுகிறேன். அல்லி மலர், கால் உடைந்த நாற்காலி, கையடக்கத் தொலைபேசி, கடிகாரம், யன்னல்,  குண்டுசி, காதல் கடிதம், கைப்பை, நூறு ரூபா நோட்டு, குப்பைத் தொட்டி ஆகிய 10 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது.

நூல் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று அஃறிணை கதை சொல்லிகளின் பாங்கு  முதல் மூன்று கதைகளிலும் சிறப்பாக உள்ளது. சின்ன வயதில் பாடப்புத்தகத்தில் பந்தின் சுயசரிதை, அகலவத்தை எனுமிடத்தில் பிறந்த பந்து தன் கதையை சொல்லும். இரவு அது உருண்டு ஓடும் போது அவன் ஏய் கல்லப்பந்தே எங்கே ஓடுகிறாய்? என விழிப்பான். அந்த உணர்வு இந்த கதைகளை வாசிக்கும் பொழுது எனக்கு ஏற்பட்டது.

அல்லிமலர் சிறுகதையில்
"என்மீது பதித்த பார்வை மீளப்பெறாதவளாய் வந்து கொண்டிருந்தாள். அவள் என்னை நோக்கித்தான் வருகிறாள் என்பது எனக்கு இப்போது மிகத் தெளிவாக விளங்கியது. முன்னைய தினங்களிலும் பலமுறை அவள் என்னை நோட்டமிட்டு இருக்கிறாள். ஆனால் நெருங்கி வந்ததில்லை. கரையில் இருந்து சற்று தூரத்தில் நான் இருந்தமையோ அல்லது சிறிதாக இருந்தமையோ அதற்கான காரணமாக இருந்திருக்கக்கூடும். அவள் என் பக்கத்தில் வந்து விட்டால் முகத்தை வெவ்வேறு கோணங்களில் வளைத்தவளாய் என்னை உற்று நோக்கிக் கொண்டிருந்த அவளின் உதடுகள் மெதுவாக விரிந்தன. புன்னகைக்கத் தொடங்கின. ஆம் அவள் என்னுடன்தான் புன்னகைக்கிறாள். வாடி இருந்த அவளது முகம் ஒருகணம் மலரத் தொடங்கியது.
என்பதனை இங்கு குறிப்பிடலாம்.

குறிப்பாக எல்லா கதைகளுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையைக் காணலாம். சிலவேளை தலைப்புக்கு ஏற்றாற்போல் கதை சொல்லும் பாணி வேறுபட்டிருந்தாலும் கூட கதைகளின் கருக்கள் பெரும்பாலும் ஒன்றாகவே அமைந்து இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. காரணம் எல்லாக் கதைகளும் ஏழ்மையையும் செல்வத்தையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அல்லிமலர் தொடக்கம் குப்பை தொட்டி வரை இந்த ஒற்றுமையை அவதானிக்கலாம். 

அல்லி மலரில் ஒரு குடும்பம் அல்லி மலரை பறித்து விற்பனை செய்து அந்த அல்லிமலர் எவ்வாறு செல்வந்தர் வீட்டில் ஒரு நாளை கழிக்கிறது என்பதுவும், கையடக்கத் தொலைபேசியில் ஒரு உணவுப் பொதி ஊடாக ஏழ்மையான ஒருவருக்கும் நடுத்தர குடும்பத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை சொல்ல முற்படுகிறது. 

கடிகாரம் வறுமையான ஒரு தந்தை வாங்கிக் கொடுத்த கடிகாரம், தான் உயர் நிலை அடைந்த பின்னும் தந்தை வாங்கிக் கொடுத்தது என்பதற்காக வேறு ஒரு கடிகாரத்தை கட்டிக்கொள்ள மனம் விரும்பாத பெறுமதியான ஏழ்மையை சுட்டிக்காட்டுகிறது. மிகவும் உணர்ச்சிபூர்வமான கதை. இங்கு நான் ஒரு விடயத்தை குறிப்பிடுதல் வேண்டும் எனது தந்தை மரணித்து 12 வருடங்களுக்கு பின்னர் அவருடைய  மேற்சட்டை (shirt) எனக்கு கிடைத்தது. அது அவரது பெட்டியில் இருந்தே எடுக்கப்பட்டது.எலிகள்  தனக்கு வேண்டியதையெல்லாம் கடித்து எடுத்துவிட்டு எனக்கு வேண்டியதை மட்டும் விட்டு வைத்து இருந்தது. அதை பத்திரமாய் கொண்டு வந்து என் கணவனின் மேற்சட்டைகளோடு வைத்திருக்கிறேன். காலங்கள் கடந்தாலும் எதிர்பார்ப்புகள் உடனான ஞாபக சின்னங்கள் இன்னொரு நபரினால் ஈடு செய்ய முடியாதது, என்ற உயரிய தத்துவத்தை இக்கதை சுட்டிக்காட்டுகிறது. இச்சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கதையும் கடிகாரம் என்பதுதான். பெற்றோர் பிள்ளைகளுக்கு பலதடவை வாசித்துக் காட்ட வேண்டியதும்,  தாம் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியதுமான ஒரு கதை.  ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

கடிகாரத்தை தொடர்ந்து யன்னல் என்ற சிறுகதையில் கூட வறிய வீட்டிற்கும் செல்வந்த வீட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தையே காட்ட முற்பட்டு இருக்கிறார். குண்டூசி என்ற சிறுகதையில் யதார்த்தமாக ஓரிடத்தில் கிழிசல் இருந்தால் அல்லது பொத்தான்கள் காணாமல் போனால் குண்டூசியே அவ்விடத்தை நிரப்புகின்றன. அது இன்றும் எம்மிடையே நடைமுறையில் இருக்கிறது. அவ்வாறு  குண்டூசிகள் அந்நபரின் சட்டையோடு தொடர்ந்து பிரயாணப்பட்டு  ஓர் ஏழ்மையான குடும்பத்தின் நாளாந்த வாழ்க்கையை சொல்ல முற்படுகிறது. காணாமல் போன கணவன் தொடர்பாகக் கிடைத்த செய்தி என்னையும் காணத்துடிக்கும் என் சகோதரனின் முகத்தை மனக்கண்முன் இறுதியது. 

ஒரு செருப்பு தைப்பவரின் வாழ்க்கையையும் அவருடைய வினோதத்தையும்  எடுத்துச் சொல்ல முற்பட்டுள்ள கதை கைபை.  நூறு ரூபா நோட்டு எப்படி செல்வந்த காலத்தில் ஒரு குறித்த நபருடன் இருந்த நூறு ரூபா அவர் வறுமை அடைந்த பின் அவரிடம் கடத்திய சில நாட்களை சொல்வதாக இருக்கிறது. 

இறுதியாக  புகையிரத பெட்டிகளில் இடத்தைப் பிடித்துக்கொண்ட குப்பைத்தொட்டி ஓய்வுபெற்ற இரண்டு ஆசிரியர்களின் ஓய்வு காலத்தை சொல்ல முற்பட்டு இருக்கின்ற வேளை உங்கள் பொதிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனும் அறிவுறுத்தலூடாக  ஏழ்மையையும் சொல்லப்பட்டிருக்கிறது. 

காதல் கடிதத்தில் கூட இத் தொனிப்பொருள் மேலெழுந்து காணப்படுகின்றது. அதில் காதலன் செல்வந்த குடும்பத்திலும் காதலி  வறுமையான குடும்பத்திலும் பிறந்த காரணத்தினால் அவர்களின் காதல் கைகூடாமல் இருந்துவிடுகிறது. 

 இப்படி எல்லாக் கதைகளும்  ஏழ்மையையும் செல்வத்தையுமே குறிப்பிட முற்பட்டுள்ளது. எனினும் குறிப்பாக சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் பத்தில் மூன்று கதைகளுக்கு மட்டுமே "க" என்ற எழுத்தில் தலைப்பு கிடைக்காமல் போயிருக்கிறது. 

கதையை தொடங்கியது முதல் முடிக்கும் வரை பேசுவதற்கு சரியான அஃரிணைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. குண்டுசி கைத்தொலைபேசி, கை பை, கடிகாரம் நூறு ரூபா நோட்டு என்பன குறித்த உயர்திணைகளோடு தொடர்ந்தும் பயணிக்கின்றன. இக் கதைகளை வாசிக்கும்போது சிலநேரம் உயர்திணையே கதை சொல்கின்றன போன்ற உணர்வு இடைக்கிடையே ஏற்படுகிறது. மிகவும் உன்னிப்பாக நீண்டகாலம் எடுத்து வாசித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு. 

புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னர் என் தாய் அதனை வாசித்துவிட்டு  அதைப் பற்றி இப்படி குறிப்பிட்டார்.

"மிகவும் அருமையாக யதார்த்தமாக இருக்கிறது".

 அவர் குறிப்பிட்டது போன்று நாளாந்த வாழ்வோடு யதார்த்தமாக பின்னிப் பிணைந்த ஒரு சிறுகதைத் தொகுப்பு. சிறுவர்கள் விரும்பி வாசிக்க்கூடிய நூல். எனினும் அவர்கள் வாசிக்கும் வகையில் எழுத்துகளின் அளவினை அதிகரித்து படங்களுடன் பிரசுரிப்பது வரவேற்கத் தக்கது. தான் கைத்தேராத ஒரு இலக்கிய வடிவத்தில் புதிது புனைய முற்பட்டுள்ள ஆசிரியரின் முயற்சி வெற்றி கண்டுள்ளது. வாழ்த்துக்கள்.











Wednesday, 11 March 2020

நான் காணும் மனிதர்கள் (Who am I meet) -1





நான் காணும் மனிதர்கள்.

அன்று சனிக்கிழமை பெற்றோரியம் (Art of parenting)  பற்றி பேசுவதற்கு ஹங்வெல்ல பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். 

வழியில் செல்லும் போது எதேச்சையாக ஒரு சம்பவத்தை கண்ணுற்றேன்.தாய் ஒருவர் தன் மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு கடை வீதியில் நடந்து  சென்றுக்கொண்டிருந்தார். அவரோடு இன்னொரு சகோதரியும் வந்துக் கொண்டிருந்தார்.  மகன் சிறிது நேரத்தில் அழத் தொடங்கி விட்டான். அதற்கு காரணம் தாயிடம் எதையோ எதிர்பார்த்து கேட்ட வினாவிற்கு திருப்தியாக பதில் அளிக்காமை ஆகுமென  நான் ஊகித்துக் கொண்டேன். 


அவன் தொடர்ந்தும் தன் தேவையை முன்வைக்க தவரவில்லை. கோபமடைந்த தாய் அவனது தலையில் பல முறை குட்டினார்.

இந் நிகழ்வு என்னை கவலையில் ஆழ்தியது. என்னுடைய இறந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது.


அது 1998 அல்லது 1999 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். எங்கள் வீட்டுக்கு மின்சார இணைப்பு செய்யப்பட்ட முதல் இரண்டு வருடங்கள். அப்போது எனக்கு 12-13 வயதாக இருக்க வேண்டும். என் மூத்த சகோதரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. தபால் உத்தியோகத்தர் கடிதத்தினை, என்  ஆசிரியர் ஒருவரிடம் கொடுத்து எங்களிடம் ஒப்படைத்து விடுமாறு கையளித்திருந்தார்.

மற்றொரு நாள் தபால் உத்தியோகத்தர் தங்களுக்கு கடிதம் கிடைத்ததா? என்று வினவும் வரை எங்கள் கைகளுக்கு அக்கடிதம் கிடைக்கவில்லை. பலமுறை கடிதம் தொடர்பாக ஆசிரியரிடம் வினவினோம். அவர் எங்கள் கையில் சேர்க்க பல நாற்கள் ஆகின.

அன்று வெள்ளிக்கிழமை,  என் தாய் பாடசாலை விட்டதும் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று கடிதத்தை எடுத்து வருவதாக முடிவு செய்தார்.

நானும் உம்மாவும் அங்கு சென்றோம். மதிய வேளை உணவு முடிந்து ஆசிரியர் கடிதத்தைத் தேடத் தொடங்கினார். அவரின் பிள்ளைகள் தொலைக்காட்சியில்   குணா படத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி இல்லாத எங்கள் வீட்டில்,  எங்காவது சென்றாள் தொலைக்காட்சி பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒரு விடயம். 

அன்று தான் முதல்தடவை குணா படத்தினை பார்க்கிறேன். மிகவும் விறுவிறுப்பான ஒரு படம். படத்தில் நாங்கள் மூழ்கியிருக்க ஆசிரியர் கடிதத்தை தேடுவதில் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருந்தார். எனது தாயும் செய்வதறியாது அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

படம்  முடிய அரை மணித்தியாளங்கள் இருக்கும் பொழுது, கடிதம் கையில் கிடைத்தது.  எனது தாய் நன்றி கூறிக்கொண்டு வெளியேறுவதற்கு தயாராகி என்னிடம் வந்தார்.

நானோ சுவாரசியமாக படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரம் எனக்காக அவரும் தாமதித்தார். படம் முடிவதாக இல்லை. என் மகிழ்வை கலைத்து அழைத்துச் செல்வதில் அவருக்கு விருப்பமில்லை. ஏனெனில் இன்னுமொரு முறை அப் படத்தைப் பார்ப்பதற்கு அவரால் ஒரு  சந்தர்ப்பத்தைத் தர முடியுமா என்ற நம்பிக்கை அவருக்கு அப்போது இருக்கவில்லை. அதற்கு முதல் காரணம் எங்கள் வீட்டில் அப்போது தொலைக் காட்சிப் பெட்டி இல்லை. ஏன் இப்போதும் இல்லை.

அவர் வேகமாக வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது. ஏனெனில் எனது தந்தை ஒரு பாரிசவாத நோயாளியாக இருந்தார். அவருக்கு பணிவிடைகளை செய்வதில் எனது தாய்க்கு நிகர் யாருமில்லை. அதில் பயத்துடன் கூடிய ஒரு கடமையுணர்வு மிஞ்சியிருந்தது. 

தாமதமாக சென்றதற்கு அவரிடம் கிடைக்கும் எதிர்வினையை நினைத்து உம்மா  என்னை இப்படி அழைத்தார்.

"நான் மெதுவாக செல்கிறேன்   
நீ விரைவாக வா"


எனக்கு அப்போது இவ்விரண்டு வசனங்களின் தாத்பரியமும் பெறுமதியும் விளங்கவில்லை. அப்போது எனக்கிருந்த உணர்வு படத்தின் முடிவு எப்படி அமையும் என்பதுவே.

பிற்காலத்தில் நான் தொகுத்து வெளியிட்ட, 

"தமிழ் திரைப்படங்களில் காணப்படும் உளவியல் அம்சங்கள்"  (collection of abnormal disorders in Tamil cinema)


என்னும் தொகுப்பில் குணா படமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குணாவும் அபிராமியும் இறுதியல் மலையிலிருந்து குதிக்கின்றனர். 


"இது மனிதர் உணர்ந்து கொள்ள 
மனித காதல் அல்ல 
அதையும் தாண்டி புனிதமானது".

என்ற வரிகள் இன்றும் அந்த நாள் திரைப்படத்தைப் பார்த்த ஞாபகங்களை என் முன் கொண்டுவருகிறது.

ஆனால் இருபது வருடங்கள் கழித்த பின் தான் என் தாய் அன்று எனக்கு குறிப்பிட்ட அவ்விரண்டு வசனங்களின் பெறுமதி அல்லது ஒரு தாயின் அணுகுமுறை எனக்கு புலப்பட்டது.

என் விருப்பினை,  
என் சந்தோஷத்தை,
என் மகிழ்ச்சியை, 
என் ரசனை உணர்வை எல்லாம் பாதிக்காது வீட்டிற்கு வேகமாக செல்லவேண்டும் என்ற சிந்தனையையும் தந்து, அவரும் நானும் பெரிய இடைவெளியிலில்லாது வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவையையும் உணர்த்தி,  சிலவேளை வாப்பாவின் தண்டனையும் கருத்திற்க் கொண்டு அதிலிருந்து என்னை காப்பாற்றி அவர் மெதுவாக வீட்டை சேரும் போது நான் வேகமாக சென்று அவரை அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கையில் என்னை திரைப்படத்தின் முடிவு காண அனுமதித்த அந்தத் தாயின் அவ்விரண்டு வசனங்களும் அவரின் அணுகுமுறையும் அன்மையில் நான் கண்ட தாயின் அணுகுமுறையோடு ஒப்பிட்டுப் பார்க்க வைத்தது.

பெற்றோரியம் என்பது, (art of parenting) ஒரு கலை. மிகப்பெரிய பொறுப்பு. கயிற்றின் மேல் நடக்கும் ஜிம்னாஸ்டிக் ஒரு போட்டி.

என் பெற்றோரை நான் பின்பற்றுவதாக இல்லை. ஆனால் அவர்கள் எப்போதும் தலை நிமிர்ந்து நான் அவர்களை பார்க்கும் அளவுக்கு என்னை வளர்த்து விட்டிருக்கிறார்கள். 

அந்த பெருமக்கள் இருவருக்கும் உயர்ந்த சுவர்க்கத்தை பிரார்த்திக்கிறேன்.

நான் காணும் மனிதர்கள் போல் நீங்களும் பல மனிதர்களை காண்பீர்கள். அவர்களிடம் கற்கும் பாடங்கள் பாட புத்தகங்களில் ஒரு நாளும் மீட்டப்படாதவை.  அவை பட்டை தீட்டப்பட்ட மாணிக்கக் கற்கள்.

Sunday, 17 November 2019

#ஆயிஷா ( Aisha)ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை kg.



என் வழிப்போக்கன் - 14/11/2019

ஆயிஷா
ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை.

இவள் தான் இன்று என் காலை பயணத்தில் கூட பயணித்தவள்.

 திரு. இரா நடராசன்  ஆயிஷா, ஒரு விஞ்ஞான நூலுக்கான அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்னும் குறுநாவலில் 24 பக்கங்களில் ஆயிஷாவை வாழவைத்து மடிந்து போக செய்திருக்கிறார்.

புத்தகத்தை வாசிக்கும்போது இது ஒரு குறுநாவல் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தவில்லை.

வாசித்து முடிந்தபின்னர் ஆரம்பத்தில் நூலாசிரியர் குறிப்பிடுவது போல ஏனைய 12 நூல்களையும் வாசிக்க வேண்டும் என்று ஆசை வந்தது.

ஆயிஷாவின் ஆசிரியர் எழுதிய 12 நூல்களையும் தேடி பயணித்தேன். அப்போதுதான் இது ஒரு புனைகதை என்று தெரியவந்தது.

திரு இரா நடராசன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.  வாசிக்கும்போது முன்னுரை..... இவ்வளவு பெரிதாக இருக்குமா?  என்ற ஐயம் என்னுள் தோன்றினாலும் முடியும்வரை வாசிக்க உங்கள் புத்தகம் என்னை ஆர்வப் படுத்தியது.

யாரையும் குற்றம் சொல்லாது எம் சுற்றம் நடந்து கொள்வதை அப்பட்டமாக ஆயிஷா கதையில் பேசியுள்ளாள். அவள் வாயிலாக எழுந்த எல்லா வினாக்களும் உங்களின் இளமைக் கால வினாக்களாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இன்றைய கல்வி தொடர்பில் முன்வைக்கப்படும் எல்லா விமர்சனங்களையும் அது உள்ளடக்கியுள்ளது.

இப் புத்தகத்திற்கு ஆயிஷா என்ற பெயர் இட காரணம் என்ன?

எது எப்படியோ நான் சார்ந்த சமூகத்திற்கு ஆயிஷா நல்ல ஒரு படத்தை காட்டி இருக்கிறாள்.

கல்விக்கு வயதுக்கும் தொடர்பில்லை. அது அதுக்கு ஒரு வயது வேண்டும் என்பதனையும் அவள் சரியாக எனக்கு சொல்லி இருக்கிறாள். வேறென்ன வேண்டும் இதை விட பெரிய பாடம்.

தூங்கிக் கொண்டிருக்கும் எம் சமூகம் ஆயிஷாகளை உருவாக்க வேண்டிய தார்மீக கடமையில் இருக்கிறது.

இம் முயற்சியில் என்னுடைய பங்கு என்ன என்று நாம் ஒவ்வொருவரும் சுயவிசாரணை செய்து கொள்வோம்.

ஆயிஷாவை என் கையில் சேர்த்த #உரையாடல்_தொடர்கிறது என்ற முகநூல் நட்புக்கு நன்றி.

#Thahir_Noorul_Isra
#NIE_Diary
#Aisha_Ira_Nadarasa

Wednesday, 6 November 2019

சில நிமிடங்கள் பார்வை இழந்த என் விழிகள் (Sighted minutes of my eyes)

சில நிமிடங்கள் பார்வை இழந்த என் விழிகள்.

கற்றல் என்பது மனித கருவில்  இருந்து ஆரம்பிக்கின்றது என விஞ்ஞானம் குறிப்பிடுகின்றது. இதனாலே கற்றல் என்பது வாழ்நாள் முழுதும் இடம்பெறும் ஒரு செயற்பாடு என உளவியல் குறித்துக் காட்டுகிறது. நாம் எவ் விடயங்களை கற்க வேண்டும் என்று பட்டியலிட்டு கற்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மனிதன் இடத்துக்கிடம், சூழலுக்கேற்பவும்  சந்தர்ப்பத்திற்கேற்பவும்  கற்கின்றான்.

சிறுபராயம் முதல் எமக்கு வழிகாட்டிய ஒரு விடயமே பிறருக்கு உதவுதல். இது ஒரு குணப் பண்பாக நாம் எம்மில் வளர்த்து வந்த ஒரு விடயம். ஆனால் பிறருக்கு உதவுவதற்கும் நாங்கள் படிக்க வேண்டுமா என சிந்தித்திருக்கிறோமா? 

‌மிக அண்மையிலேயே நான் பிறருக்கு உதவவும் கற்றல் வேண்டும் எனும் விடயத்தை கற்றுக்கொண்டேன். 

ஒரு நபருக்கு நாங்கள் உதவி செய்ய முற்படுதல்  என்பது மிக அழகான  பண்பாகும். நாங்கள் உதவி செய்யும் பொழுது எங்களுக்கு தேவையான சந்தர்ப்பங்களில் உதவிகள் கிடைக்கின்றன இதனை எம் வாழ்நாளில் நாங்கள் உணர்ந்திருப்போம். எமக்குக் கிடைத்த மகிழ்ச்சியினால் நாம் தொடர்ந்தும் இன்னொருவருக்கு  உதவி செய்ய முன் வருகிறோம். இவ்வாறு உதவி செய்வதற்கு நாம் முறையாக கற்றுள்ளோமா? அல்லது கற்பிக்கப்பட்டுள்ளோமா?  என்ற வினா எழுந்ததுண்டா? இதுவே என்னை ஆச்சரியத்தில் உட்படுத்திய விடயம் ஏனெனில் எதை செய்வதென்றாலும் முறையாக செய்தல் வேண்டும். அதற்கு முறையாக கற்றல் வேண்டும்.

‌ முதல் விடையம்

உதவி செய்பவர் உதவி செய்ய விருப்போடு இருப்பது போல உதவி பெருபவர் அவரின் உதவியை பெற தேவையோடு இருக்கிறாரா? என்பதனை ஏதேனும் ஒரு வகையில் உறுதிப்படுத்தல் வேண்டும்.

பிறருக்கு உதவுதல் என்ற பாடத்தில்  எவ்வாறு பிறருக்கு உதவுதல் வேண்டும் என்பதனை பாடப் புத்தகங்கள் நமக்கு சொல்லித் தருகின்றன. பார்வை குறைபாடுடைய நபர் வெள்ளை பிரம்புடன் பாதையை கடக்க தயாராக இருப்பார் அவரின் கையைப் பிடித்து கொண்டு மறு புறத்தில் அவரை சேர்ப்பது கூட ஒரு உதவி என்பதனை அழகாக  அது எடுத்துக் காட்டியுள்ளது.  நாங்கள் பல சந்தர்ப்பங்களில் பார்வை குறைபாடு உடைய ஒரு நபரை இவ்வாறு பாதையில் ஒரு புறத்திலிருந்து மறுப்பு இடத்திற்கு அழைத்துச் சென்று இருப்போம்.

உங்களுடைய  புறங்கையால் அவருடைய புறங்கையை தட்டுவது ஊடாக நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். அவ்வாறே அவரின் புறங்கையால் உங்களது கையை தட்டும் போது அவர்  உதவியை ஏற்க தயாராக இருக்கிறார் என்பதனை அறிந்து கொள்கிறோம்.  

யாரும் எப்போதும்  தன்னுடைய தேவையை நிறைவு செய்து கொள்வதற்கு இன்னொருவரின் உதவியைப் பெறவும் தங்கி நிற்கவும் ஒருபோதும் விரும்புவதில்லை.

கடவுள் ஒவ்வொருவருக்கும் விசித்திரமான ஆற்றல்களையும் உள்ளுணர்வையும் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் இயலாமை உடைய ஒரு நபராக இருந்தாலும்கூட கடவுள் எல்லோருக்கும் வித்தியாசமான திறமைகளையும், ஆளுமைகளையும், பண்புகளையும், குணங்களையும், கொடுத்திருக்கிறார். அடிப்படையில் அவற்றை பிரயோகித்து தனது வாழ்நாளில் இன்னொருவரிடம் தங்கி நிற்காமல் செல்வதற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நாம் சுயமாக எனது உதவியை செய்ய முற்படும் செயலானது அவருடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை முடக்கும் செயற்பாடாகும்.

ஒருவனுடைய  கால் உரையில் தன்னுடைய காலைவிட்டு பார்க்கும் போது தான் அதனுடைய வேறுபாடுகளையும் அதனுடைய விசித்திரங்களையும் எங்களால் முறையாக உணர்ந்துகொள்ள முடியும்.  ஒரு நாள் பார்வைக் குறைபாடுடைய நபராக நாங்கள் இருந்து பார்த்தால்தான் அவர்களுடைய உணர்வுகளை எங்களால் முற்றாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஒரு சில மணித்தியாலங்கள் பார்வை குறைபாடு உடைய நபராக மாரிய அன்று நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் இது.  இப்பாடம் உங்களுக்கும் உதவியாக அமையும் என்று கருதியதால் இதனை பதிவிடுகிறேன்.
நன்றி.
7/11/2019
#NIE_Diaryll

Monday, 13 April 2015

Radio interview on Cancer Care and Palliative Care

 

Radio interview on Cancer Care and Palliative Care by Silmiya Hadhee in 102.3 fm (National service, Muslim service, Madhar Majlish.) 0n 14th April 2015 -part -1

வலியில்லா மரணத்தை ஒவ்வொரு இலங்கையரும் உறுதிசெய்வோம்




வலியில்லா மரணத்தை ஒவ்வொரு இலங்கையரும் உறுதிசெய்வோம்


உலகில் நிகழ்கின்ற மொத்த மரணங்களில் 10 சதவீதம் மாத்திரமே திடீர் என ஏற்படுகின்றன. மீதமுள்ள 90 சதவீதமான மரணங்களும் வலி நிவாரணமும் சாந்தப்படுத்தலும்; சிகிச்சைக்கு (Palliative Care) ஏதோ ஒரு வகையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தள்ளப்படுகின்றன. ஆனால் எத்தனை பேர் அதனைப் பெற்று அமைதியான மரணத்தை அடைகின்றனர் என்பது கேள்விக்குறியே.

எம்மில் பலர் மரணத்தின் பிடியில் நாட்களை எண்ணிக்கொண்டு வலியையும் பல்வேறு அசௌகரியங்களையும் அனுபவித்து, எப்போது மரணம் தன்னை ஆட்கொள்ளும் என்று அறியாதவர்களாய் தம் விதியை நொந்து கொள்கின்றனர். இவ்வாறு மருத்துவராலும், மருந்துகளாலும்  கைவிடப்பட்ட நோயாளர்களின் மன மற்றும் உடல் சார் வலி மற்றும் அசௌகரியங்களை போக்கி, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சமூகத்துடன் இணைந்து செய்யும் ஒரு விஷேட மருத்துவ சிகிச்சையேபாலியேர்டிவ் கேயர்” (Palliative Care) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்வலி நிவாரணமும் சாந்தப்படுத்தல் சிகிச்சையும்ஆகும். இதன் நோக்கம் நோயை குணப்படுத்துவது அல்ல. நோயாளர்களுக்கு உதவி செய்தலே ஆகும்.

நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்தல் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும் இயலுமான சந்தர்ப்பங்களில் மருத்துவரை அணுகி மருத்துவ உதவியினை பெற்றுக்கொள்ளும் நாம்,  எப்போது படுத்த படுக்கையாகி எமது அடிப்படை தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாமல், மற்றவரிடம் தங்கி நிற்கின்றோமோ அன்று முதல் எமது மருத்துவ உரிமையை அனுபவிக்கமுடியாதவர்களாக மாறுகின்றோம்.

வலியுடனும் பல்வேறு அசௌகரியங்களுடனும் தமது இறுதி நாட்களை கழிக்க தொடங்கும் புற்றுநோய் (cancer), பால்வினை நோய் (AIDS), எலும்புருக்கி நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்று வீடுகளுக்கு அனுப்பட்டவர்கள், இறக்கும் வரை படுக்கையில் நாட்களை கழிக்கும் பக்கவாதம் (paralyses), தசை தளர்சி (mussels weakness) போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்கள், விபத்துகளுக்கு உட்பட்டு வாழ்நாள் முழுதும் படுக்கையிலோ அல்லது அங்கவீனர்களாவும் முடங்கி வாழ்கின்றார்கள், முதுமையினால் அவதிப்படுகின்றவர்கள் போன்றவர்களுக்கு உதவும் மருத்துவ முறைமையேவலி நிவாரணமும் சாந்தப்படுத்தலும் சிகிச்சைமுறைமையாகும். வயது வரம்பு, பால் வேறுபாடு, கல்வி நிலை என எந்தவித வித்தியாசமும் காட்டாத சிகிச்சையேபாலியேர்டிவ் கேயர்” (Palliative Care).
பயிற்றப்பட வைத்தியர்கள், தாதிகள், சமூக பணியாளர்கள், தன்னார்வ தொண்டரகள் மற்றும் ஏனைய நிபுனர்கள் உள்ளடக்கிய திறமை மிக்க குழுவினால் உள் நோயாளர்கள் அல்லது பராமறிப்பு நிலையங்கள் (Hospice or Palliative care inpatient unit), வெளி நோயாளர் பிரிவு (outpatient unit), வீடுகள் (Home Care) என பல தரத்தில் இச் சிகிச்சை வழங்கப்படுகின்றது. இச்சிகிச்சை முறையில் நோயாளி முழுமையாக கவனத்திற்க் கொள்ளப்படுவார். குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தாதி உடல் ரீதியாக சிகிச்சையளிப்பர். சமூகபணியாளர்கள் நோயாளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தி கொடுப்பர். உளவியளார்கள் அல்லது உளவளத்துணையாளர்கள் நோயாளிக்கும் குடும்பத்தினருக்கும் உளநலத்தை பேண உதவிச் செய்வர். தொண்டர்கள் அன்பும் ஆதரவும் கொடுத்து அவர்களுக்கு பக்கபலமாக ஒத்துழைப்பார்கள். இவ்வாறாக நோயாளி மாத்திரம் அன்றி அக் குடும்பமே பிரயோசனப்படுவதுடன், அவர்களின் பழு பகிரப்படுவதனால் நோயாளி மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நாட்களை கழிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கின்றது.
இறுதியாக குறிப்பிடப்பட்ட முறைமையானது ஜனநாயக தன்மை வாய்ந்ததாகவும் எளிமையானதாகவும் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. ஒரு குறித்த சமூகத்தில் உள்ள மக்களே அவர்களிடையே அவதிப்படும் நோயளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஓர் சமூகம் சார் முறையாகவும் காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே வலி நிவாரணமும் சாந்தப்படுத்தல் சிகிச்சையும் (Palliative Care) இலங்கையில் ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக (20/4/2015) “இலங்கை பாலியேரடிவ் கேயர் அசோசியேசன்”(Srilanka Palliative Care Association) ஆரம்பிக்கபடவுள்ளது. வலியில்லா மரணத்தை ஒவ்வொரு இலங்கையரிடமும் கொண்டு செல்வதற்கான தருனம் உதயமாகி விட்டது. அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டிய காலம் இதுவே. எறுப்புகளாய் அணிதிறள்வோம்.

ஆக்கம்:
தாஹிர் நூருல் இஸ்ரா
சமூகபணியாளர்
மின்னஞ்சல்: israanas@gmail.com

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...